ரகசியமாய்ப் பேசிக்கொள்கிறேன்
மழலை பேசும் குழந்தை நான்
இன்று - ஐம்பதாவது
பிறந்த நாளைக் கொண்டாடும்
பாலகன் நான்
என்னை வாழ்த்துங்கள்
பல நூற்றாண்டுகள் வாழ
ஆண்டு ஆயிரத்து நாட்பத்தொன்பதில்
தூண்டப் பட்ட இந்த விளக்கு
ஒரு ஓலைக் குடிசைக்கு
வெளிச்சம் கொடுத்தது
ஓய்ந்திடாது இன்று
பல மாடிக் கட்டிடங்களால்
பளிச்சிடுகிறது
பருவங்கள் ஒவ்வொன்றிலும்
கனிஸ்ட, சிரேஸ்ட, மத்திய
வித்தியாலயங்கள் என
நாமங்கள் நான் பெற்று - பின்
சாஹிராக் கல்லூரி என
நிலையான நாமம் பெற்றேன்
இன்று தேசிய ரீதியிலும்
தரமுயர்வு பெற்றேன்
முதலில்,
எனக்கு கொடுத்த
எம். எஸ். காரியப்பர் எனும்
உத்தமனை நினைத்து
சில கண்ணீர் துளிகளை
காணிக்கையாக்குகிறேன்
என்னை கையிலெடுத்து
முத்தமிட்ட
முதல்வர்களில் முதல்வரான
எம். ஐ. எம் காதர் முதல்
எ. எம். முஸ்தபா வரை
முழந்தாளிட்டு
முதல் மரியாதை செலுத்துகிறேன்
நான் ஒரு
தீக்குச்சியாய் எரிகிறேன்
சூரியனுக்கு போட்டியாய்
ஒரு தீபத்தை உருவாகுவதற்கு
என் கைகளில்
உளிகள் மட்டும்தான் இருக்கிறது
இங்கு வரும் கற்கள்
செதுக்கப் பட்டுக் கொண்டேதான்
செல்கின்றன
நான் ஒரு குயவனாய் இருக்கிறேன்
இங்கு வரும் களிகள்
வணையப் பட்டே
செல்கின்றன
இங்கு சிகப்பு ரோஜாக்கள்
பூப்பதற்கு அனுமதியில்லை
ஏனெனில் - இது
மல்லிகைகளால் மட்டும்
உருவாக்கப்பட்ட நந்தவனம்
கல்வி, கலை, விளையாட்டு
எத்துறையிலும் முன்னோடி
வெற்றிகள் பல கொண்டாடி
சாதனைகளும் படைத்ததுண்டு
எம் சரித்திரத்தில்
இதை விட அதிகமுண்டு
நான் கால ஓட்டத்தில்
வெள்ளி விழா, பொன்விழா
என்று கொண்டாடிக் கொண்டேதான் இருப்பேன்
ஆம்
நாளையும் நானிருப்பேன்
அடுத்த நூற்றாண்டு குழந்தைகளை
அரவணைப்பதற்காக
இளமையோடு தானிருப்பேன்
பின்குறிப்பு:
வெளியிடப்படாத ஸாஹிராவின் பொன்விழா மலருக்காக எழுதப்பட்ட கவிதை.
பத்தாண்டுகளின் பின் மீட்டு பார்க்கிறோம் ...